கடக ராசியில் 7 ஆம் வீட்டில் அமர்கின்ற குரு பகவானின் பார்வையானது, 11 ஆம் வீடு, 1 ஆம் வீடு, 3 ஆம் வீடுகளின் மீது விழுகிறது. 11 ஆம் வீடு என்பது லாபம், விருப்பங்கள் நிறைவேற்றுதல் ஆகியவற்றையும், 1 ஆம் வீடு திறமைகள், குணநலன்கள், பொது வாழ்க்கை ஆகியவற்றையும், 3 ஆம் வீடு என்பது தகவல் தொடர்பு, துணிவு, கடவுள் நம்பிக்கை, இளைய சகோதரர்கள், அண்டை அயலார் ஆகிவற்றைக் குறிக்கும்.
கடகராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சாதகமான காலம். செல்வச் செழிப்பில் கொழிக்கின்ற வேளை இது. கணவன் மனைவிடையே மற்றும் நெருக்கமானவர்களுடன் உறவு சுமூகமாக இருக்கும். தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் பெற்று தடைகளை கடந்து வெற்றி பெறுவீர்கள். வயதில் மூத்தவர்களுடன் பழகுவதில் கவனம் தேவை. நண்பர்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள். பயணங்கள் மகிழ்வைத் தரும். விமானப் பயணங்களுக்கு வாய்ப்பில்லை.
ஆன்மீக நாட்டம் குறைகின்ற காலமிது. குடும்பம் மற்றும் பொது இடங்களில் விதிமுறைகளை அனுசரித்து நடக்கமாட்டீர்கள். இதனால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். சுயக்கட்டுப்பாடு அவசியமாகிறது. கருத்து வேறுபாடுகளும் ஏற்படும்.
வேலை, தொழில்
வீடு, வாகனம் வாங்கல் விற்றல் தொழிலைத் தவிர பிற தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் முயற்சிகளுக்கும், கூட்டுத் தொழில் செய்வதற்கும் ஏற்ற தருணம் இது. கடுமையான முயற்சியினால் சிறந்த பலன்கள் கிட்டும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்கள் சேவையை நன்றாக மேற்கொள்வீர்கள். இதனால் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
அலுவலகத்தில் சக பணியாளர்களும், கீழ் பணிபுரிவர்களும் இணக்கமாக இருப்பார்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்காது. வேலையில் சுமாரான வளர்ச்சி இருக்கலாம்.
நிதி
சொத்து தொடர்பான விஷயங்களில் பலன்கள் இல்லையென்றாலும், பல்வேறு விதமான வழிகளில் வருமானம் உயரும். ஊக வணிகத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பங்குச்சந்ததை, மியூச்சுவல் பண்ட்கள் சாதகமாக இருக்காது. தொழில் செய்வோர் கணிசமான லாபத்தை பார்க்கலாம். வருங்காலங்களில் செலவு அதிகமாக இருப்பதால் எதிர்காலத்திற்காக பணம், சொத்தை சேமிப்பது வைப்பது சிறப்பு. உங்கள் துணை மற்றும் கூட்டாளியின் நிதிநிலை நன்றாக இருக்கும்.
குடும்பம்
குடும்பத்தில் இணக்கமான நல்லுறவு நிலவும். அன்புடனும், ஆதரவுடனும் இருப்பார்கள். மூத்தவர்களின் மனம் கோணாத வகையில் நடப்பது நல்லது. பொதுவான புரிந்துணர்வு ஏற்படும். மற்ற உறவினர்கள் அளிக்கும் ஆதரவினால் மகிழ்ச்சியும், உற்சாகமும் உண்டாகும்.
கல்வி
மாணவர்கள் அதிக முயற்சிகளை மேற்கொண்டு கடுமையான உழைப்பினால் நல்ல பலன்களைப் பெறலாம். உயர் கல்வி கற்கும் மாணவர்கள் தாங்கள் விரும்புகின்ற கல்வித்துறை மற்றும் கல்லூரி கிடைப்பதில் கால தாமதம் ஏற்படலாம். போட்டி, விசேஷத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும்.
காதலும், திருமண வாழ்க்கையும்
கணவன் மனைவியிடையே பரஸ்பர புரிந்துணர்வு ஏற்பட்டு உறவில் நல்லிணக்கம் ஏற்படும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்காமல் போகலாம். திருமணத்திற்கு வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. காதலர்கள் பெரியவர்களின் எதிர்ப்பைசந்திக்க வேண்டி வரும்.
ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியம், துணையின் ஆரோக்கியம், உடன் பிறப்புகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை. ரத்த அழுத்தம், கொழுப்பு போன்றவை உயர வாய்ப்பிருப்பதால் பரிசோதனை செய்து கொள்வது நலம். மன அமைதியே ஆரோக்கியத்தின் அடிப்படை. மனதை லேசாக வைத்துக் கொள்ளுங்கள்.
எளிய பரிகாரங்கள்
- ஓம் குருவே நமஹ என்ற மந்திரத்தை வியாழக்கிழமை காலையில் 108 முறை ஜெபிக்கவும்.
- பசுக்களுக்கும், பறவைகளுக்கும் வாழைப்பழம், மஞ்சள் நிற இனிப்புகள் வழங்கலாம்.
- ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை தாருங்கள்.
- அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் தயிர் அல்லது தயிர்சாதம் வழங்கலாம்.
- ஆல மரத்திற்கும், அரச மரத்திற்கும் நீருற்றி வணங்கலாம்.
- வாழைப்பழம் உண்பதையோ, தூங்கும் அறையில் வைப்பதையோ தவிருங்கள். இது வியாழன் கிரகத்தின் எதிர்மறை தாக்கங்களை விலக்கும்.
Comments
Post a Comment